105 நிறுவனங்கள் தொடர்பாக விசாரணை

இறக்குமதி என்ற போர்வையில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 715 மில்லியன் டொலர்

by Staff Writer 22-07-2026 | 5:18 PM

Colombo (News 1st) 2023 தொடக்கம் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் 715 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட பாராளுமன்றத்தின் அரச நிதி பற்றிய குழுவில் வௌிக்கொணர்ந்துள்ளார். 

வௌிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இவ்வாறு நாட்டிலிருந்து பணம் வௌியேற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் வௌிநாடுகளுக்கு பணத்தை அனுப்பி பொருட்களை இறக்குமதி செய்யாமை தொடர்பில் இலங்கை சுங்கம் பொலிஸ் மாஅதிபரை தொடர்புகொண்டு மூன்று அறிக்கைகளை முன்வைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அரச நிதி பற்றிய குழுவில் தௌிவுபடுத்தியுள்ளார். 

2026 ஜனவரி 20 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட முதலாவது அறிக்கையின் பிரகாரம் 89 நிறுவனங்கள் இவ்வாறு T T ஊடாக பொருட்களை இறக்குமதி செய்வதாக தெரிவித்து எந்தவொரு பொருளையும் நாட்டிற்கு கொண்டுவரவில்லை என அவர் குறிப்பிட்டார். 

2026 பெப்ரவரி  23 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இத்தகைய நான்கு நிறுவனங்கள் தொடர்பாகவும் 2026 மார்ச் 6 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட அறிக்கையில் அத்தகைய 12 நிறுவனங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

முழுமையாக 105 நிறுவனங்கள் இந்த நடவடிக்கையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார். 

இந்த 105 நிறுவனங்களும் 214.7 பில்லியன் ரூபா அதாவது சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலரை நாட்டில் இருந்து வௌியேற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த பணத்திற்கான எந்தவொரு பொருளும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். 

இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த 105 நிறுவனங்களிலும் உள்ள பணிப்பாளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். 

இதன்போது 105 நிறுவனங்கள் சார்பிலும் 55 பேர் மாத்திரம் தொடர்புப்பட்டிருந்தமை தெரியவந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் குறிப்பிட்டார். 

இதற்காக 217 வங்கி கணக்குகளும் பயன்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. 

விரிவான விசாரணைகளின்போது இலங்கையின் 13 வங்கிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார். 

43 நிறுவனங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் 

முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். 

சந்தேகநபர், தரகர்களிடம் பணம் பெற்று போலியான ஆவணங்களை தயாரித்து சில வங்கிகளிலுள்ள ஊழியர்களின் ஒத்துழைப்போடு இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. 

இவ்வாறு இறக்குமதி என்ற போர்வையில் பணத்தை வௌிநாடுகளுக்கு அனுப்பி எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாத நிறுவனங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் விரிவான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்தார்.