.webp)

Colombo (News 1st) சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஸவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு இன்று(17) உத்தரவிட்டார்.
முறையற்ற விதத்தில் நிதியை பயன்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர், வழக்கு குற்றவியல் சட்டக் கோவையின் 127ஆவது சரத்தின் கீழ் இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சந்கேதநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மன்றுக்கு அறிவித்தார்.
2014ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபா பணத்தை சுற்றுலா அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாது, ஊவா மாகாண சபையின் தேர்தல் பிரசாங்களுக்காக 12,000 Tshirt-களை அச்சிட்டு வழங்கிய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கையிட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரான ரூமி ஜௌபர் என்பவரை தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவித்ததுடன், அவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தும் நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் மீது பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
B அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி பணிப்பாளரின் பெயர், சந்தேநபராக குறிப்பிடப்பட்டுள்ளதாக என நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த குற்றப் புலனாய்வு திணைக்களம், அது குறித்து சட்ட மாஅதிபரிடமிருந்து இதுவரை ஆலோசனை ஏதும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டது.
சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முன்னாள் தலைவரான பாஷ்வர குணவர்தனவை தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி உத்தரவிட்டது.
