''சம்பத் மனம்பேரி மன்றத்தில் சரணடைய தயார்''

மித்தெனிய ஐஸ் விவகாரம் : சம்பத் மனம்பேரி மன்றத்தில் சரணடைய தயார் - மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிப்பு

by Staff Writer 15-09-2025 | 6:35 PM

Colombo (News 1st) மித்தெனியவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்​பேரி எனும் நபர் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு தயாராகவிருப்பதாக சட்டத்தரணிகளின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று(15) அறிவித்தார்.

தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் அடங்கிய 02 கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமது சேவைபெறுநரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருவதாக மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

தனது சேவைபெறுநரின் சகோதரரான பியல் மனம்பேரியை கைது செய்து தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளதாகவும் 78 வயதான அவரின் தந்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறினார்.

சேவைபெறுநரின் சகோதரர் தடுப்புக்காவலில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

விசாரணைகளுக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நீதவான் நீதிமன்றத்தில் சரணடைவதற்கும் சம்பத் மனம்பேரி தயாராகவிருக்கின்ற போதிலும், கைது செய்யப்பட்டதன் பின்னர் தனது சேவைபெறுநரை விசாரணை அதிகாரிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கும் சாத்தியமுள்ளதாக அச்சம் காணப்படுவதாகவும் சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.

தனக்கு தெரிந்த சகல விடயங்களையும் கூறுவதற்கு தனது சேவைபெறுநர் தயாராக இருப்பதாக சட்டத்தரணி கூறினார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், விசாரணைக்கான சந்தர்ப்பத்தில் மனுதாரரான சம்பத் மனம்பேரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டது.

மனுதாரரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தமக்கு கீழுள்ள விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் நீதிமன்றம் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டது.

அடுத்த மாதம் 16ஆம் திகதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்