.webp)
Colombo (News 1st) கடந்த காலத்திலிருந்து மீண்டு நீதியான மற்றும் உறுதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் பயணம் தனது நாட்டு மக்கள் மாத்திரமின்றி முழு உலகும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக உள்ளதாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் கூறினார்.
இலங்கை மிகப்பெரிய மனித வாக்குறுதிகளைக் கொண்ட நாடு என்பதுடன், வலி மிகுந்த அழுத்தங்கள் மற்றும் அதிர்ச்சிகளின் மத்தியிலும் அதன் ஜனநாயகத்தை பாதுகாத்து வந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தெரிவித்தார்.
பல தசாப்த காலமாக நிலவிய பிரிவினை மற்றும் வன்முறையிலிருந்து இலங்கை தற்போது மீண்டு வருவதாகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை, தண்டனையிலிருந்து விடுபடல் மற்றும் சமத்துவமின்மை ஆகிய 2 முக்கியமான பொறிகளில் விழும் அபாயத்தில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
படுகொலைகள், பயங்கரவாதம், வலிந்து காணாமலாக்கப்படல், சித்திரவதை அல்லது பாலியல் வன்முறை ஆகியவற்றின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் வேதனையான செயன்முறை என தெரிவித்த ஆணையாளர், நீதி கிடைக்காமையானது சமாதானத்தின் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படும் என தெரிவித்தார்.
இலங்கையில் மனித கண்ணியம், நீதி மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தனது அலுவலகம் 21 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து சமமான சமூகம், பாகுபாடுகளிலிருந்து விடுபாடு, வௌிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுள்ள அமைப்புகள் மற்றும் பொது வாழ்வில் தீர்மானம் மேற்கொள்வதற்கான மக்களின் அர்த்தமுள்ள பங்கேற்பு உள்ளிட்டவற்றை நோக்கிய முன்னேற்றத்திற்கு மனித உரிமைகள் பேரவை ஒத்துழைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது அலுவலகம் இந்த நாட்டிற்கு வௌிப்படுத்தும் கண்ணாடி, சில வேளைகளில் ஒரு சங்கடமான விம்பத்தை வௌிப்படுத்தினாலும் அது உண்மையைப் பிரதிபலிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு முக்கிய தருணத்தில் உள்ளதாகவும் இது ஒரு புதிய அத்தியாயமாகவும் புதிய வாய்ப்பாகவும் இருக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.