வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சுற்றறிக்கை விசாரணை..

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சுற்றறிக்கைகள் தொடர்பில் விசாரணைகள்..

by Staff Writer 21-06-2025 | 4:42 PM

Colombo (News1st) இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கடந்த சில வருடங்களில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் குழுவிற்கு பிரதியமைச்சர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தின் போது வெளியிடப்பட்ட மற்றும் பாரிய நிதி மோசடிகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கைகள் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட சுற்றறிக்கைகளை அடையாளம்கண்டு அவற்றின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் ஆராயுமாறு பிரதியமைச்சர் அதிகாரிகளை கோரியுள்ளார்.

உரிய அனுமதிகளுடன் குறித்த சுற்றறிக்கைகள் வௌியிடப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து பொறுப்புகூற வேண்டிய அதிகாரிகளை கண்டறியுமாறும் பிரதியமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

14 நாட்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் குழுவிடம் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.