.webp)
Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு மருந்தான ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொடிய பெக்டீரியா நீர் இருந்தமை நீதிமன்றத்தில் நேற்று(20) வௌிக்கொணரப்பட்டது.
இந்த மருந்து தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் முடிவுகளை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு தெரிவித்தபோது இது தெரியவந்தது.
தரமற்ற மருந்துகள் என அடையாளம் காணப்பட்ட ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மற்றும் ரிட்டோப்சி மெப் மருந்துகள், உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மன் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. பரி
சோதனை அறிக்கைக்கு அமைய ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொடிய பெக்டீரியா நீர் மட்டுமே உள்ளது என்பதும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான ரிட்டோப்சி மெப் மருந்தில் உப்பு நீர் மட்டுமே உள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
முதலாவது சந்தேகநபர் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்காக இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்தனரா என மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இதன்போது வினவியதுடன் அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முதலாவது சந்தேகநபரால் மருந்து உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மூலப்பொருட்களும் சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் சுங்க வகைப்பாடு எண்ணின் கீழ் சரிபார்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அமைச்சரவை பத்திரத்தின் மூலம் பெறப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் மூலம் இந்த மருந்துங்கள் அவசரமாக கொள்வனவு செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பாக அண்மையில் வாக்குமூலம் பெற்றதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சம்பந்தப்பட்ட பத்திரத்திற்கு முழுப் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம கூறினார்.
முதலாவது சந்தேகநபருக்கும் மற்றைய சந்தேகநபர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையையும் விசாரணை அதிகாரிகள் தயாரித்துள்ளதாகவும் இது அவர்களுக்கிடையிலான தொடர்பை தெளிவுபடுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
தரமற்ற மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நிரந்தர 3 நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதவான் நீதிமன்றத்திற்குத் குறிப்பிட்டார்.