.webp)
Colombo (News 1st) நிதித் தூய்தாக்கலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்கள் இருவர் மற்றும் மருமகன் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க நேற்று(19) உத்தரவிட்டார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவரது கணவரான இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் கெஹெலிய ரம்புக் வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சந்தேகத்திற்கிடமான வங்கிக்கணக்குகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளுக்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றில் குறிப்பிட்டனர்.
சந்தேகத்திற்கிடமான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதிப் பத்திரங்கள் ஆகியவற்றை மேல்நீதிமன்ற உத்தரவுக்கமைய இடைநிறுத்தியுள்ளதாகவும் அதன் பெறுமதி 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமெனவும் குறித்த அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு ஒக்டோபர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிதித் தூய்தாக்கலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்றுமுன்தினம்(18) கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட போதும் நேற்றே அவர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தனர் என்பதுடன் அதன்படி அவர்களை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.