.webp)
வவுனியா மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியுள்ளது.
வவுனியா மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் வவுனியா மாநகர சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று(16) காலை நடைபெற்றது.
21 உறுப்பினர்கள் கொண்ட வவுனியா மாநகர சபையில் முதல்வர் தெரிவுக்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சுந்தரலிங்கம் காண்டீபனும் தேசிய மக்கள் சக்தி சார்பில் சிவசோதி சிவசங்கரும் வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிட்ட சுந்தரலிங்கம் காண்டீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைத்தன.
இதன்போது ஒரு மேலதிக வாக்கை பெற்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிட்ட சுந்தரலிங்கம் காண்டீபன் வவுனியா மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 4 சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் வவுனியாவில் நேற்று(15) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனநயாக தமிழ் தேசிய கூட்டணியின் சிவசக்தி ஆனந்தன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் க.துளசி உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.