.webp)
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழுக்களால் சிறைச்சாலைகளிலுள்ள ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்காத அனுராதபுரம் சிறைச்சாலையின் கைதியொருவர் வெசாக் பூரணை தினத்தில் விடுதலை செய்யப்பட்டமையுடன் இந்த சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளாருமான காமினி பீ.திசாநாயக்க தமது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளார்.