.webp)
Colombo (News 1st) திருகோணமலை கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட நபரொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சிலரை கைது செய்வதற்காக கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடற்படையினர் இருவரும் காயமடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்தது.
திருகோணமலை புறாத்தீவை அண்மித்த கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடிப் படகை பயன்படுத்தும் குழுவொன்றை கைது செய்யும் நடவடிக்கை கடற்படையால் நேற்று(03) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தடை செய்யப்பட்ட உபகரணங்களுடன் 48 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மற்றுமொரு படகை கைப்பற்றி கரைக்கு கொண்டுவரும்போது இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்களை கரைக்கு கொண்டுவரும்போது 3 சிறிய படகுகளில் வந்த குழுவினர் கடற்படை வசமிருந்த மீன்பிடிப் படகை கடத்திச்செல்ல முயற்சித்ததாக கடற்படை தெரிவித்தது.
இதன்போது தாம் சட்டரீதியான முறையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அங்கிருந்த 5 கடற்படை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அமைதியின்மையை ஏற்படுத்தியவர்கள் தாம் வந்த படகினால் கடற்படை படகுடன் மோதியுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் வேறு படகுகளில் வந்தவர்களுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டதாக கடற்படை தெரிவித்தது.
கடற்படை உறுப்பினர் வசமிருந்த T-56 ரக துப்பாக்கியை பறிக்க முயற்சித்து அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கியுள்ளதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்போது அவர்களில் ஒருவரின் தோளில் துப்பாக்கிச்சூட்டினால் காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கடற்படை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தானதாக இல்லை எனவும் கடற்படை கூறியது.
சுருக்குவலை, ஜெலட்னைட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட முறைமையை பயன்படுத்துபவர்கள் சாதாரண மீனவர்கள் அல்லவென கடற்படை தெரிவிக்கின்றது.
திட்டமிட்ட குழுவொன்றே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை கண்டித்து கிண்ணியா மீனவர்களால் கிண்ணியா தோனா கடற்கரையிலிருந்து தோனா மீனவர் சங்கக் கட்டடம் வரை கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று(04) காலை முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, திருகோணமலை - குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதென கூறப்படுவதாகவும் முழுமையான விசாரணைகளின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.