.webp)
Colombo (News 1st) 'ஈ சாலா கப் நம்தே' எனும் பெங்களூரு ரசிகர்களின் நீண்ட நாள் கனவு வாசகம் நேற்றிரவு(03) நனவானது.
இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் வரலாற்றில் ரோயர் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் தடவையாக சாம்பியன் பட்டத்தை நேற்றிரவு சூடிக்கொண்டது
.
2008 ஆம் ஆண்டில் இந்தத் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் நட்சத்திர வீரர் விராத் கோலி 17 வருடங்கள் கழித்து ஆனந்த கண்ணீருடன் சாம்பியன் கிண்ணத்தை முத்தமிட்டார்.
''எனது இளமை காலத்திலிருந்து பெங்களூரு அணிக்காக மட்டும் விளையாடுகிறேன். எனது இதயம், ஆன்மா என எல்லாம் பெங்களூரு அணியுடன் உள்ளது. பெரிய தொடர்களில் வெல்ல விரும்புவேன். IPL மாத்திரம் 'மிஸ்' ஆகிக் கொண்டே இருந்தது. 18ஆவது ஆண்டில் சாம்பியன் மகுடம் கிடைத்துள்ளது. இந்த நிம்மதியில் இனி நான் ஒரு குழந்தையை போல நிம்மதியாக துாங்குவேன்''-என்று வெற்றியின் பின்னர் விராத் கோலி மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைக் குவித்தது.
விராத் கோலி 43 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
191 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
4 ஓவர்களில் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்த குர்ணால் பாண்ட்யா இறுதிப் போட்டியின் ஆட்டநாயன விருதை வென்றார்.
இதன்மூலம் IPL போட்டிகளில் 2 தடவைகள் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் எனும் மைல்கல் சாதனையை குர்ணால் பாண்ட்யா எட்டினார்.
இதற்கு முன்பு அவர் 2017இல் மும்பை சாம்பியனான போது இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்களான மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல், தென்னாபிரிக்காவின் ஏ.பி டிவிலியர்ஸ் ஆகியோர் இறுதிப் போட்டியை கண்டுகளிக்க வந்திருந்ததுடன் வெற்றியின் பின்னர் கோலி உள்ளிட்ட வீரர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
IPL அரங்கில் சென்னை (2010, 2011, 2018, 2021, 2023), மும்பை (2013, 2015, 2017, 2019, 2020) அணிகள் தலா 5 முறை சாம்பியனாகியுள்ளன. கொல்கத்தா 3 முறை (2012, 2014, 2024) வெற்றியீட்டியுள்ளது. ராஜஸ்தான் (2008), டெக்கான் சார்ஜஸ் (2009), ஐதராபாத் (2016), குஜராத் (2022) ஆகிய அணிகளுடன் தற்போது பெங்களூரு (2025) அணியும் சாம்பியனான ஓர் அணியாக பட்டியலில் இடம்பிடித்துள்ளது.