17 வருட தாகத்தை தீர்த்துக்கொள்ளப் போவது யார்?

17 வருட தாகத்தை தீர்த்துக்கொள்ளப் போவது யார்?

by Rajalingam Thrisanno 03-06-2025 | 7:48 PM

Colombo (News 1st) இந்தியன் பிரீமியர் லீக்(IPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று(03) இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இரசிகர்கள் அதிகளவில் நேசிக்கும் இக்கால கிரிக்கெட் வீரர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக வர்ணிக்கப்படும் விராத் கோலி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளமை அந்த அணியை மேலும் பலப்படுத்துகிறது.

2008ஆம் ஆண்டிலிருந்து அவர் இந்த அணிக்காக விளையாடி வருவதுடன் இம்முறை வெற்றிக் கிண்ணத்தை முத்தமிட வேண்டும் என்பதே கோலி உட்பட RCB இரசிகர்களின் ஒரே இலட்சியக் கனவாக உள்ளது.

RCB அணி இதற்கு முன்னர் 2009, 2011, 2016ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள போதிலும் அவர்களால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.

இதேவேளை, கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியாக 2008ஆம் ஆண்டில் அறிமுகமாகி படுதோல்வியடைந்து பின்னர் ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியமை என பல கசப்பான அனுபவங்களுடன் கரடுமுரடான பாதைகளைக் கடந்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி IPL வரலாற்றில் 2ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முன்பு அவர்கள் 2014ஆம் ஆண்டில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன் அப்போதும் அவர்களால் வெற்றி மகுடத்தை சூட முடியவில்லை.

IPL சாம்பியன் மகுடத்தை முதல் தடவையாக சூடும் கனவுடன் 2008ஆம் ஆண்டு முதல் போராடிக்கொண்டிருக்கும் RCB மற்றும் PBKS அணிகளில் 17 வருட தாகத்தை தீர்த்துக்கொள்ளப் போவது யாரெனும் கேள்விக்கு இன்றிரவு விடை கிடைக்கும்.