கிருஷாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை குற்றவாளிகளின் பொதுமன்னிப்பு கோரல் மனு உயர் நீதிமன்றினால் தள்ளுபடி

by Staff Writer 03-06-2025 | 6:43 PM

Colombo (News 1st) பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி எனும் பாடசாலை மாணவியின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனு இன்று(03) குமுதினி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றப்படாததால் தமக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையை 20 வருடங்களாக குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(03) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

மனு மீதான பரிசீலனையை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாது என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் வாதிட்டார்.

மனுவை தாக்கல் செய்வதற்கான முறையான சட்ட காலம் நிறைவடைந்ததன் பின்னரே மனுதாரர்கள் தமது மனுவை தாக்கல் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் அவர்களின் மனுவை பரிசீலிப்பதற்கு நீதிமன்றத்தினால் இயலாது எனவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதால் அத்தகைய மன்னிப்பை கோருவதற்கான சட்டபூர்வ உரிமை மனுதாரர்களுக்கு இல்லை எனவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை தள்ளுபடி செய்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

1998ஆம் ஆண்டு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீபதிகள் குழாம், தம்மை குற்றவாளிகளாக அறிவித்ததாகவும் அந்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டனர்.

எனினும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்தினால் மரணதண்டனையை நிறைவேற்றுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை 20 ஆண்டுகளாக மாற்றுமாறும் தண்டனை விதிக்கப்பட்ட 1998ஆம் ஆண்டு முதல் அதனை அமுல்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் தமக்கான தண்டனையை அமுல்படுத்தாவிடின் மன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.