.webp)
Colombo (News1st) பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்களை பெயரிடுமாறு சபாநாயகர் ஊடாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய இந்தக் குழுவை நியமிப்பதற்கான பரிந்துரை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் குழுவிற்கு பிரதம நீதியரசரால் நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரும் குழுவில் அங்கம் வகிக்க வேண்டும்.
மற்றைய உறுப்பினர் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன் பெயரிடப்படும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்த பின் சபாநாயகருக்கு முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதுடன் அதனை ஆராய்ந்த பின்னர் பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.