.webp)
Colombo (News 1st) இலஞ்சம் பெற்றுக்கொள்ள உதவிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி இன்று(01) உத்தரவிட்டுள்ளார்.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யோகநாதன் ரொஸ்மன் மற்றும் கௌதீகரன் பிரதீபன் ஆகிய இருவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மகாவலி அதிகாரசபையின் B வலயத்தில் உள்ள குளங்களிலிருந்து பெறப்பட்ட மணலை பிரித்தெடுப்பதற்காக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தால் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காகவே இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.