இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

by Staff Writer 23-03-2025 | 4:39 PM

Colombo (News1st)இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமென வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(22) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக 3,34,797 பேர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றதாகவும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் வசிப்பதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் 50,620 பேர் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டதுடன் 2009 தொடக்கம் இதுவரை 14,531 பேர் நாடு திரும்பியதாக வட மாகாண ஆளுநரிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக இலங்கை - இந்தியா இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமெனவும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் நாடு திரும்பிய இலங்கை அகதிகள் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதோடு தற்போது நாடு திரும்பும் இவர்கள் பெரும்பாலும் 2ஆம் அல்லது 3ஆம் தலைமுறையினர் என்பதால் தத்தமது பூர்வீக இடங்களை அடையாளம் காண்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய வட மாகாண ஆளுநர், கொள்கை ரீதியான ஆவணத்தின் ஊடாக இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.

அத்துடன் நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியல் கிடைத்த பின்னர் அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களால் கவனம் செலுத்தப்படுமெனவும் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் துறைசார் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடமாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.