சமரியின் ஆட்டத்தால் இலங்கைக்கு வெற்றி

சமரியின் அபார ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்திய இலங்கை

by Rajalingam Thrisanno 14-03-2025 | 5:45 PM

Colombo (News1st) இலங்கை மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் கிறைஸ்சர்ச்சில் இன்று(14) ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

எமா மெக்லவ்ட் 44 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

பந்துவீச்சில் மல்கி மதாரா 3 விக்கெட்டுகளையும் இனோஷி பிரியதர்ஷனி, கவிசா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணிக்கு அணித்தலைவி சமரி அத்தபத்து அபாரமாக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

மற்றைய வீராங்கனைகள் பெரிதாக பிரகாசிக்கவிட்டாலும் தனி ஒருவராகப் போராடிய சமரி அத்தபத்து 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.

இலங்கை அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை எட்டியது.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக மல்கி மதாரா தெரிவானார்.

இந்த வெற்றிக்கு அமைவாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என இலங்கை மகளிர் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.