உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் சடலம் - 7 பேர் கைது

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் கிடந்த சடலம் - 7 பேர் கைது

by Rajalingam Thrisanno 25-02-2025 | 1:26 PM

Colombo (News 1st) ஜா- எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

குறித்த நபர் கொல்லப்பட முன்பு உஸ்வெட்டகெய்யாவ கடற்கரைக்கு அவரை முச்சக்கரவண்டியில் அழைத்து சென்ற சாரதியும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரியும் பொலன்னறுவையில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று(24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்துக்கு அருகில் ரி56 ரக துப்பாக்கியும் 9 வெற்றுத் தோட்டாக்களும் கிடந்தன.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கெசல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான துபாய் கலன என்பவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.