மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் - தாய்லாந்திடம் உதவி கோரும் இலங்கை பிரதமர்

by Staff Writer 11-10-2024 | 4:02 PM

Colombo (News 1st) மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணையக்குற்ற மையங்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய கோரியுள்ளார்.

தாய்லாந்து தூதுவர் Paitoon Mahapannaporn மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இணையக்குற்ற மையங்களிலிருந்து 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், குறித்த பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நேற்றைய கலந்துரையாடலில் இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் தாய்லாந்து தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நவீன விவசாய தொழில்நுட்பப் பயன்பாடு, ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய பீடங்கள் இணைந்து அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற ஆராய்ச்சித் துறைகளுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.