கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகும் மாவை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கடிதம்

by Staff Writer 07-10-2024 | 8:04 PM

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து மாவை சேனாதிராஜா அக்கட்சியின் உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்கோள் ஆரம்பம் 

மாவை சோமசுந்தரம் சேனாதிராசா ஆகிய நான் இதுவரை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.

தாங்கள் அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக செயலாற்றி வந்துள்ளேன்.

அந்த பொறுப்பை உடன் ஏற்று தலைவராக செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன்.

2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இக்கடிதம் மூலம் அறியத்தருகின்றேன்.

எனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்கோள் நிறைவு

குறித்த கடிதத்தின் பிரதி இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், கலாநிதி பா.சத்தியலிங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.