Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நெல்லியடியில் ஆடை விற்பனை நிலையமொன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று(06) பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(05) மாலை கைது செய்யப்பட்டதுடன் குறித்த சந்தேகநபர் 24 வயதுடைய சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞர் என்பதை நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து வாள் மற்றும் பெட்ரோல் குண்டு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் வருகைதந்த மூவரால் குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டதுடன் இருவருக்கிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கான காரணமென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.