Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளைமறுதினம்(30) கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைப்பதா இல்லையா? என தீர்மானிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், தலதா மாளிகை, ஸ்ரீ மகாபோதி உள்ளிட்ட வணக்கஸ்தலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட மாட்டாது என பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.