தெஹிவளையில் 5 நாட்களில் 3 துப்பாக்கிச்சூடுகள்

தெஹிவளையில் 5 நாட்களில் 3 துப்பாக்கிச்சூடுகள் - 3 பேர் பலி

by Staff Writer 20-09-2024 | 8:22 PM

Colombo (News1st) தெஹிவளை நெதிமால மைதானத்திற்கு அருகில் இன்று(20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த 05 நாட்களுக்குள் தெஹிவளை மற்றும் சன நடமாட்டம் மிக்க பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் ஐவர் பலியாகியுள்ளனர்.

தெஹிவளை கடவத்த வீதியில் இன்று காலை 8 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனுர கொஸ்தா எனும் 45 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநாகர சபையில் பணிபுரிந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

இந்த கொலைக்கும் கடந்த 15  மற்றும் 18 ஆம் திகதிகளில் தெஹிவளையை அண்மித்து நடத்தப்பட்ட 2 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டனர்.

தெஹிவளை பட்டோவிட்ட பகுதியில் கடந்த 15 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தரிந்து மதுஷான் என்பவர் கொல்லப்பட்டார்.

கொஹூவல ரணங்கர வீதியில் கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நாகசாமி விஷ்வநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 02 குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த 03 கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்