Shakthi CROWN மகுடம் பிரணவி வசமானது

Shakthi CROWN மகுடம் கண்டியை சேர்ந்த பிரணவி வசமானது

by Staff Writer 25-08-2024 | 2:05 PM

Colombo (News 1st) நாட்டின் தனித்துவமான ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான Shakthi CROWN மகுடத்தை கண்டியைச் சேர்ந்த பிரணவி சூடிக்கொண்டார்.

Shakthi CROWN இசை நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டி இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நேற்று(24) நடைபெற்றது.

நாட்டின் முதற்தர இலத்திரனியல் சிருஷ்டிகர்த்தாக்களான MTV MBC ஊடக வலையமைப்பு, முதற்தர செய்தி வழங்குநர் நியூஸ்ஃபெஸ்ட், தெற்காசியாவின் பிரமாண்ட கலைக் கேந்திரமான ஸ்டைன் ஸ்டூடியோஸ், இசையுலகின் புரட்சியாய் திகழும் எம்.என்டர்டெய்ன்மன்ட் உள்ளிட்ட ஊடகத்துறை ஜாம்பவான்களின் ஒருங்கிணைந்த பலத்துடன் தனித்துவமாய் Shakthi CROWN நிகழ்ச்சி இம்முறை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட Shakthi CROWN நிகழ்ச்சியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் குரல் தேர்வில் பங்குபற்றியதோடு, அவர்களுள் தமது திறமைகளை  வௌிப்படுத்திய அறுவர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த பி.சிட்சபேஷன், புத்தளத்தைச் சேர்ந்த ஜி.கே, மாத்தளையைச் சேர்ந்த எஸ்.டி. மயூரன், கண்டியைச் சேர்ந்த அட்ஷயா, பருத்தித்துறையைச் சேர்ந்த ஆகாஷ் மதன் மற்றும் கண்டியைச் சேர்ந்த பிரணவி ஆகியோரே Shakthi CROWN மாபெரும் இறுதிப் போட்டியில் மகுடத்திற்காக போட்டியிட்டனர்.

அதற்கமைய, Shakthi CROWN மகுடத்தை கண்டியைச் சேர்ந்த பிரணவி சூடினார்.

போட்டியில் இரண்டாமிடத்தை கண்டியைச் சேர்ந்த அட்ஷயாவும் மூன்றாமிடத்தை மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த பி.சிட்சபேஷனும் பெற்றுக்கொண்டனர்.