விமான நிலைய கூரை கழன்று வீழ்ந்ததில் ஒருவர் பலி

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரை கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

by Bella Dalima 28-06-2024 | 3:48 PM

Colombo (News 1st) டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரையின் ஒரு பகுதி கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இடிபாடுகளில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறித்த விபத்தினால் விமான நிலையத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த மழையினால் விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதாக டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், தொடர்ந்தும் விமான நிலையத்தை சுற்றியுள்ள தாழ்வான பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
 

ஏனைய செய்திகள்