Colombo (News 1st) 200 கிலோவுக்கும் அதிக எடையுடைய ஹெரோயினுடன் நேற்று(25) கைப்பற்றப்பட்ட மீன்பிடி கப்பலின் உரிமையாளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த 38 வயதான சந்தேகநபர் மாலைதீவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு நோக்கி செல்ல தயாராகவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தற்போது கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மேற்கு கடற்பரப்பில் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட நீண்டநாள் மீன்பிடி படகு காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.