இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

by Bella Dalima 26-06-2024 | 2:36 PM

Colombo (News 1st) இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களின் குழுவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் கழக கூட்டத்தின் போது (PARIS Forum) இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக ஷெஹான் சேமசிங்க  X பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மற்றும் சீனா இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். 

கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, ஜப்பான் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு  அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

இலங்கைய எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய திருப்புமுனையாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கான தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் ஷெஹான் சேமசிங்க பாராட்டியுள்ளார். 

இதனிடையே, இலங்கைக்கும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி எனப்படும் EXIM வங்கிக்கும் இடையே, கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் இன்று பிற்பகல் அறிவித்தார்

சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியாவோ மின் (Liao Min) உடனான சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.