இசையால் வசப்படுத்தி வெற்றிவாகை சூடினார் கில்மிஷா உதயசீலன்

by Staff Writer 17-12-2023 | 10:46 PM

Colombo (News 1st) இலங்கை இசை பிரியர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் கில்மிஷா...

தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியான Zee Tamil சரி க ம பா நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே திறமையை வெளிப்படுத்திய யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன் இன்று(17)  வெற்றிவாகை சூடியுள்ளார். 

முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லுக்கு நடைமுறைச் சான்று பகிர்ந்துள்ளார் கில்மிஷா.

தமிழகத்தின் Zee Tamil சரி க ம பா லிட்டில் சேம்ப் சீசன் 3 இறுதிப் போட்டி இன்று(17) சென்னை நேரு உள்ளக வியைாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரி க ம பா லிட்டில் சேம்ப் சீசன் 3 ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்.

இறுதிப் சுற்றுக்கு தெரிவான 6 பேரில் இரண்டாவது போட்டியாளராக கில்மிஷா தெரிவாகியிருந்தார். 

பல கட்டங்களில், பல சுற்றுகளில் திறமையை வௌிப்படுத்தி ச ரி க ம ப நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் கில்மிஷா உதயசீலன்.

தேசம் தாண்டி இசையினால் எமது நாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்துச்சென்ற கில்மிஷாவிற்கு எமது மனமார்ந்த வாழத்துகள்...

தமிழகத்தின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அர்ச்சனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றிருந்தனர்.