யாழில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

by Staff Writer 19-07-2022 | 7:59 AM
Colombo (News 1st) யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(18) முற்பகல் வாள்வெட்டு தாக்குதல்  இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 29 வயதான இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்வெட்டு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.