by Staff Writer 11-05-2022 | 7:36 PM
Colombo (News 1st) நேற்று (10) மாலை முல்லைத்தீவு - செம்மலை கடற்கரையில் காணாமற்போயிருந்த மூன்று சகோதரர்களில் இருவரின் சடலங்கள் இன்று காலை கரையொதுங்கின.
நேற்று காலை 11 மணியளவில் கால்பந்து விளையாடுவதற்காக மூன்று சகோதரர்கள் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, கடலுக்குள் சென்ற பந்தை எடுப்பதற்காக ஒருவர் சென்றுள்ளார். அவர் நீரில் மூழ்குவதை அவதானித்த மற்றைய சகோதரர் கடலுக்குள் சென்று அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக மற்றைய சகோதரரும் கடலுக்குள் சென்ற நிலையில், மூவரும் காணாமற்போயுள்ளனர்.
அளம்பில் பகுதியை சேர்ந்த 27, 25 மற்றும் 22 வயதான சகோதரர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு சகோதரர்களின் சடலங்கள் இன்று காலை கரையொதுங்கின.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, அம்பாறை பெரிய நீலாவணை கடலுக்கு குளிக்கச்சென்ற நிலையில் காணாமற்போன மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காணாமற்போயிருந்த மூன்று மாணவர்களில் ஒருவர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், காணாமற்போன மற்றுமொரு மாணவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.