முதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச

23 வருடங்கள் பூர்த்தி: முதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச

by Staff Writer 10-06-2021 | 11:28 PM
Colombo (News 1st) இலங்கையின் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் புரட்சிகர பயணம் ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று. 1998 ஜூன் மாதம் 10 ஆம் திகதி தொலைக்காட்சியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய சிரச 23 வருடங்களின் பின்னரும் மக்களின் முதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு மெகா தொடர்கள், நடப்பு விவகார அரசியல் நிகழ்சிகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் நாளுக்கு நாள் சிரச தொலைக்காட்சி மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரிக்கிறது. சிரச தொலைக்காட்சி இன்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. கிராமங்களில் இருந்த திறமைசாலிகளுக்கான களத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு சிரச அறிமுகப்படுத்திய சிரச சுப்பர்ஸ்டார் மேடை மூலம் இசை உலகிற்கு அறிமுகமான பலர் இன்று நாட்டின் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். சிரச டான்சிங் ஸ்டார், சிரச குமரிய, மேன் ஹன்ட் போன்ற நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றன. புஞ்சி பஹே மங், பென்டதலன், த டிபேட்டர் ஆகிய நிகழ்ச்சிகள் ரசனைக்கு அப்பால் நேயர்களின் பொது அறிவையும் மேம்படுத்த வழிவகுத்தன. சர்வதேச தரத்திலான சிரச லக்ஷபதி நிகழ்ச்சி தற்போது இலங்கையின் மக்களை வெகுவாக கவர்ந்த பரபரப்பு நிறைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாறியுள்ளது. “த வாய்ஸ்” ஊடாக இலங்கை இளைஞர்களின் குரலை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் பணியை சிரச தற்போது முன்னெடுத்து வருகிறது. இன்பத்திலும் துன்பத்திலும் மக்களின் உறவினராக அவர்களை சிரச தொலைக்காட்சி நெருங்கியது. வௌ்ளம், வறட்சி, மண் சரிவு, தீ அனர்த்தம் என இயற்கை அனர்த்தங்களின் போது சிரச தொலைக்காட்சி நிவாரண யாத்திரை மூலம் மக்களைத் தேடிச் சென்றது.