by Staff Writer 23-03-2020 | 3:18 PM
Colombo (News 1st) எரிபொருள் நிரப்பிய நான்கு ரயில்களை இன்று நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்புமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், பொலன்னறுவையிலிருந்து அநுராதபுரம், மட்டக்களப்பு, பேராதெனிய மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட இடங்களுக்கு இந்த எரிபொருள் ரயில்கள் செல்லவுள்ளன.
தட்டுப்பாடு இன்றி முழு நாட்டிற்கும் எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு எந்த வித தட்டுப்பாடும் இல்லை எனவும் மக்கள் அநாவசியமாக பீதியடைய வேண்டிய தேவையில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் வீரசிங்க தெரிவித்தார்.
ஆகவே, எரிபொருளை அளவிற்கு அதிகமாக சேமித்து வைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் போது எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.