சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் பொய்யானது

விசேட அரச புலனாய்வு அறிக்கை என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் பொய்யானது

by Staff Writer 15-11-2019 | 7:18 PM
Colombo (News 1st) அரச புலனாய்வு சேவை உள்ளடங்கலாக பொலிஸ் திணைக்களத்தின் எந்தவொரு நிறுவனமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித கருத்துக்கணிப்பையும் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இத்தகைய போலி ஆவணத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்களுக்கு எதிரான விசாரணை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த 'விசேட அரச புலனாய்வு அறிக்கை' என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற ஆவணத்தில் அடங்கியுள்ள விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி இந்த ஆவணம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவை உள்ளடங்கலாக பொலிஸ் திணைக்களத்தின் எந்தவொரு நிறுவனமும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ அல்லது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான எவ்வித கருத்துக்கணிப்பையும் மேற்கொள்ளவோ இல்லை என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலாக நடத்துவதற்கேற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது குறித்தே பொலிஸார் முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.