இலங்கை யாத்திரிகர்களுக்கு மீண்டும் இலவச விசா

இலங்கை யாத்திரிகர்களுக்கு மீண்டும் இலவச விசா - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

by Staff Writer 27-07-2026 | 11:47 AM

COLOMBO (News 1st

இந்தியாவிற்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

புதிய விசா சேவை வழங்குநர் ஒருவர் நியமிக்கப்பட்டதால் இலவச விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் கடந்த 7ஆம் திகதி முதல் அந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாக பரிந்துரைக்கப்படும் 10 பேருக்கும் மேற்பட்ட யாத்திரிகர் குழுக்களுக்கு எந்தவித விசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகங்களில் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

12 முதல் 70 வயதிற்குட்பட்டோர் கைரேகை மற்றும் உயிரியல் தரவுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் சிரேஷ்ட பிரஜைகளுக்காக ​விசேட விரைவு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விசா கட்டணம் அறவிடப்படாவிட்டாலும் இந்திய தூதரகத்தின் விண்ணப்ப மையத்திற்காக 1,855 ரூபா செலுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.