இன்று முன்னிலையாக முடியாதென யோஷித அறிவிப்பு

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென யோஷித அறிவிப்பு

by Staff Writer 16-06-2026 | 3:31 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக முடியாதென அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகவுள்ளதால், இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக முடியவில்லையென யோஷித ராஜபக்ஸ எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமி அகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே அவர் இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, விசாரணைகளுக்காக நாளை(17) ஆஜராகுமாறு யோஷிதவிற்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அழைப்புக்கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2006 செப்டம்பர் மாதத்தில் அப்போதைய கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட, பிரித்தானிய கடற்படை அகடமியில் யோஷித ராஜபக்ஸவை இணைப்பது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடிதத்தினூடாக அவர் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த கோரிக்கையை செயற்படுத்த முடியுமென அந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தினமொன்றில் பிரித்தானிய அகடமியினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

கடற்படையில் சேர்க்கப்படும் பயிற்சி அதிகாரியொருவர் உயர்தரத்தில் உயிரியல் அல்லது கணிதப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென அப்போதைய காலத்தில் தகுதி நிர்ணயம் காணப்பட்டதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யோஷித ராஜபக்ஸ கலைப்பிரிவில் உயர்மட்ட தேர்ச்சியை பெற்றிருந்ததால், ஆட்சேர்ப்பு தகுதிகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் மாத ஆட்சேர்ப்பின் போது க.பொ.த சாதாரண தர பெறுபேறு தொடர்பாகவும் சிக்கலான நிலை எழுந்ததாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த திருத்தமும் யோஷித ராஜபக்ஸவின் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யோஷித ராஜபக்ஸ 2007 ஜனவரி மாதத்தில் பிரித்தானியாவிற்கு சென்று, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய கடற்படை அகடமியில் இருந்துள்ளமை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

பயிற்சி புலமைப்பரிசில் அடிப்படையில் யோஷித ராஜபக்ஸவை அகடமியில் சேரத்துக்கொள்ள முடியாமையினால், அதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தின் பணத்திலிருந்து ஈடுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரை இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.