டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் மேலதிக விசாரணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் தொடர்பில் மேலதிக விசாரணை - பொலிஸ்

by Staff Writer 28-12-2025 | 2:38 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

15 T-56 ரக துப்பாக்கிகளும் 9 மில்லிமீட்டர் ரக 05 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 1500-இற்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 100-இற்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு 2001ஆம் ஆண்டு குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளமை வௌிக்கொணரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 03 நாட்கள் தடுப்புக்காவலின் கீழ் வைத்து விசாரணை செய்வதற்கு நேற்று(27) அனுமதி வழங்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம்(26) சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார்.

2001ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் கைத்துப்பாக்கி 2019ஆம் ஆண்டு வெலிவேரியவில் கால்வாய்க்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த இடத்தில் இருந்து துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையின் பின்னரே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.