ஜனாதிபதி நிதிய சேவைகளை ஒன்லைன் ஊடாக பெற நடவடிக்கை

ஜனாதிபதி நிதிய சேவைகளை ஒன்லைன் ஊடாக பெற நடவடிக்கை

by Staff Writer 21-06-2025 | 4:50 PM

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் ஒன்லைன் ஊடாக இன்று(21) முதல் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு விரிவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், புலமைப்பரிசில் வழங்குதல், விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலகங்களின் ஊடாக ஒன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளமுடியும்.

இதற்கமைய கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்குவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.