.webp)
Colombo (News 1st) தங்கமுலாம் பூசப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கி தம்மிடம் இருக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் பர்டி ப்ரேமலால் திசாநாயக்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி வௌிக்கொணர்ந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி பொலிஸ் மத்திய துப்பாக்கி களஞ்சியசாலையில் இருந்து வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று அல்ல என விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் நேற்று(19) ஆஜர்படுத்தப்பட்டதுடன் சாட்சியங்களின் தொகுப்பு அறிக்கையுடன் மேலதிக அறிக்கையொன்றையும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கல்கிசை நீதவான் சத்துரிகா டி சில்வா முன்னிலையில் சமர்ப்பித்தனர்.
2 பெண்கள் தங்கமுலாம் பூசப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கியொன்றுடன் வௌ்ளவத்தை ஹெவ்லொக் பகுதியிலுள்ள சொகுசு வீட்டுத் தொகுதியொன்றில் நுழையும்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் முன்னாள் அமைச்சரும் அவரின் கீழ் குறிப்பிட்ட காலம் சேவையாற்றிய சமையற்கலை நிபுணரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
ரீ 56 துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த பயணப் பைக்குள் இருந்து 2 விமானப்பயணச் சீட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த விமானப்பயணச் சீட்டுகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அது தொடர்பில் அவர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் துமிந்த திசாநாயக்க மற்றும் அவரது சமையற்கலை நிபுணரான மூன்றாவது சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும் அனுமதி வழங்கினார்.