.webp)
Colombo (News1st) தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேவைக்கேற்ப மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்தார்.
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு பயணிக்கும் மக்களுக்காக இன்றும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய பதுளை, பெலியத்தை, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை வரை மேலதிக ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக யாழ் தேவி, ரஜரட்ட ரெஜின ரயில்களில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டு பிறப்பையடுத்து பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் சூழவுள்ள பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, கிருலப்பனை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளிலும், மத வழிபாட்டு தலங்களை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பாதுகாப்புக்காக 35,000-க்கும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.