மஹிந்தவின் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

மஹிந்தவின் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

by Staff Writer 19-03-2025 | 6:22 PM


Colombo (News1st)தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

முறையான மதிப்பீட்டின்றி தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்ட மாஅதிபர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 29 பேர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி தனது பாதுகாப்புக்காக கடமையிலிருந்த சுமார் 60 பேர் தவிர்ந்த ஏனையோர் நீக்கப்பட்டதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறித்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் அதனை இன்று நிராகரித்துள்ளது.