.webp)
Colombo (News1st) பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும் அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரது சொத்துக்கள் தடை செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜராகும் பட்சத்தில் சொத்துக்களை விற்பனை செய்ய அல்லது சொத்துக்களை விற்பனை செய்து பெறப்பட்ட வருமானத்தை அவருக்கே மீள வழங்குவதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்பதுடன் இந்த நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.