ஏப்ரலின் பின்னர் டிஜிட்டல் அடையாள அட்டை

ஏப்ரலின் பின்னர் டிஜிட்டல் அடையாள அட்டை - டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

by Staff Writer 19-02-2025 | 8:51 AM

Colombo (News 1st) டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான தரவுகளை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் ஊடாக தரவுகளை வழங்குவதற்காக பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இணையம் மூலமான திட்டமொன்றும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டார்.

முதலாம் கட்டத்தின் கீழ் டிஜிட்டல் அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போரின் நிழற்படம் மற்றும் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் கண்விழிகளின் அடையாளத்தை BIOMETRIC டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

புதிதாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போருக்கு முதலாம் கட்டத்தின் கீழ் டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பழைய அடையாள அட்டைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளையும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.