77ஆவது சுதந்திர தினம் இன்று

நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் இன்று

by Staff Writer 04-02-2025 | 2:33 PM

Colombo (News 1st) நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று(04) நடைபெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.

தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பமானது.

மங்கள வாத்தியங்கள் முழங்க ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றியதும் பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும் சுதந்திர தின விழாவில் பங்கேற்றிருந்தனர்.

தாய்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக இன்னுயிரைத் தியாகம் செய்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முப்படை  வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி இதன்போது ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சுதந்திர தின விழாவில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், தேசிய மாணவர் படையணியினரும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இதனையடுத்து, சுதந்திர தின நிகழ்வில் ஜனநாயக சோசலிச குடியரசின் 10ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.

பாரம்பரிய கலாசார நடனங்கள் பல தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை மேலும் அலங்கரித்தன.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளைக் கண்டுகளிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இறுதியாக தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு சுதந்திர தின நிகழ்வு நிறைவுற்றது.

இதேவேளை, நாட்டிற்கு கௌரவத்தை வழங்கும் வகையில் காலி முகத்திடலில் 25 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன.