3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 24-10-2024 | 9:12 AM

Colombo (News 1st) இன்று(24) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் டெங்கு அபாய வலயங்களில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மத வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்புப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அத்துடன், ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.