பொதுத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(11) நண்பகலுடன் நிறைவு

by Staff Writer 11-10-2024 | 10:45 AM

Colombo (News 1st) 2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் இன்று(11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.

பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவுள்ள நிலையில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதிக்குள் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 241 சுயேட்சை குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை 349 ஆகும்.