அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111ஆவது ஜனன தினம் இன்று(30)

by Staff Writer 30-08-2024 | 1:06 PM

Colombo (News 1st) 'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111ஆவது ஜனன தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின்  தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் ஆவார்.