இரா.சம்பந்தன் காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்

by Staff Writer 01-07-2024 | 9:40 AM

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றிரவு(30) காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 91 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1933 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி இராஜவரோதயம் தம்பதியரின் புதல்வராக தமிழரின் வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கையின் திருகோணமலையில் சம்பந்தன் பிறந்தார்.

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி, குருணாகல் புனித அன்னம்மாள் கல்லூரி, திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகள் சம்பந்தனின் கல்வி பயணத்திற்கு வலுசேர்த்தன.

பின்னர் இலங்கை சட்டக்கல்லூரியில் பயின்ற அவர் திறமையான வழக்கறிஞராக காலடி பதித்தார்.

லீலாவதியை கரம்பிடித்த சம்பந்தன் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

1956 ஆம் ஆண்டு இலங்கை தமிரசுக் கட்சியில் இணைந்துகொண்டமை சம்பந்தனின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாகும்.

1963 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இரா.சம்பந்தனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் வேட்புமனு வழங்க முன்வந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை.

எனினும், 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் மக்கள் ஆணையைப் பெற்றார்.

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்ததால் 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி இரா.சம்பந்தனுக்கு பாராளுமன்ற ஆசனத்தை இழக்க நேர்ந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளராகவும் உபதலைவராகவும் பொதுச் செயலாளராகவும் அவர் பதவி வகித்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு இரா.சம்பந்தனின் அரசியல் வாழ்வில் மற்றுமொரு மைல் கல்லாகும்.

2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  அவர் 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் கீழ் போட்டியிட்ட இரா.சம்பந்தன் அந்தக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார்.

2004, 2010 ஆகிய 2 பொதுத் தேர்தல்களிலும் திருகோணமலை மாவட்ட மக்களின் அமோக ஆதரவுடன் சம்பந்தன் வெற்றி பெற்றார்.

2014 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியை அவர் மாவை சேனாதிராசாவிடம் ஒப்படைத்தார்.

எனினும், தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுபவமுடைய சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்டு வந்த இரா.சம்பந்தன், கடந்த பொதுத் தேர்தலிலும் கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச்சென்று 16 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்திருந்தார்.

பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் உரிமைக்காக குரல்கொடுத்துவந்த இராஜவரோதயம் சம்பந்தன் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நன்மதிப்பை பெற்ற இராஜதந்திரமிக்க தலைவராகவும் திகழ்ந்தார்.