Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த மாதம் 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்கி எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி சோபித்த ராஜகருணா முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செயற்படுத்தினால், தற்போதும் நட்டத்தில் இயங்கும் தமது தோட்ட நிறுவனங்கள் முழுமையாக செயலிழக்கும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடாது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படுவதைத் தடுத்து, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்காதிருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழில் ஆணையாளர் நாயகம் H.K.A.ஜயசுந்தர, தொழில் அமைச்சின் செயலாளர் H.G.W.குணவர்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட 52 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.