பலத்த மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

பலத்த மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 02-06-2024 | 2:30 PM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும்150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கொழும்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதனிடையே, மரம் முறிந்து வீழ்ந்ததில், கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரக்காபொல பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வௌ்ள நீரினால் பாலமொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதால், அவிசாவளை மற்றும் வக பகுதிகளுக்கிடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிங் கங்கையின் தவலம பகுதியில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தவலம பகுதியில் வௌ்ள நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக பல பகுதிகளிலும் மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை விடுவிக்க தயாரென நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோரை மீட்பதற்காக விமானப் படையின் Bell 212 ரக இரண்டு விமானங்கள் மற்றும் Bell 414 விமானமொன்றும் தயார் நிலையிலுள்ளதாக விமானப் படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கும் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 117 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.