Colombo (News 1st) 2024 பரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கான சுடர், புராதன ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது.
கிறிஸ்துவிற்கு முன் 776 ஆம் ஆண்டில் இவ்வாறான போட்டிகள் நடத்தப்பட்டிருந்ததாக வரலாறு கூறும் நிலையில், அதற்கு சான்றாக ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பக் உள்ளிட்ட பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நவீன ஒலிம்பிக் விழாவின் போது சுடரை பேரணியாக ஏந்திச்செல்லும் வழமை 1936 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பேர்ளின் ஒலிம்பிக் விழாவின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் ஒவ்வொரு ஒலிம்பிக் விழா ஆரம்பமாவதற்கு முன்பும் கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டு விழாவை நடத்தும் நாட்டிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இவ்வாண்டுக்கான சுடரை கிரேக்கம் முழுவதும் 5,000 கிலோமீட்டர்களுக்கு 11 நாட்களாக 600 பேர் ஏந்திச்செல்லவுள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற கிரேக்கத்தின் Stefanos Ntouskos ஒலிம்பிக் சுடர் பவனியை ஆரம்பித்து வைத்தார்.
ஒலிம்பிக் சுடர் எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிஸ் ஒலிம்பிக் விழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் 50 நகரங்களுக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லவுள்ளனர்.
இந்த சுடர் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் விழாவில் ஏற்றப்படவுள்ளது.
செப்டம்பர் 8 ஆம் திகதி வரை 2024 ஒலிம்பிக் விழா நடைபெறவுள்ளது.